பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படும் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தற்போது உள்ளூர் டி20 போட்டிகளில் அபாரமாக ஆடி வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் மகாராஜா டி20 தொடரில் அவரது பேட்டிங் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிரடியாக சிக்ஸர்களை அடித்து மிரட்டி வருகிறார். இந்த நிலையில், அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், பிசிசிஐ விதி ஒன்று அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. தற்போது 18 வயதாகும் சமித் டிராவிட் கர்நாடக மாநில அண்டர் 19 அணியில் இடம் பெற்று கூச் பேகார் தொடரில் விளையாடி இருக்கிறார்.

ஆனால், அவர் இதுவரை கர்நாடக மாநில சீனியர்கள் அணியில் இடம் பெற்றதில்லை. ஐபிஎல் ஏல விதிப்படி உள்ளூர் வீரர் ஒருவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் அவர் குறைந்தது இரண்டு லிஸ்ட் ஏ போட்டிகள் அல்லது முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். லிஸ்ட் ஏ என்பது உள்ளூர் ஒருநாள் போட்டியாகும். முதல் தர டெஸ்ட் போட்டி என்பது உள்ளூர் டெஸ்ட் போட்டி ஆகும். மேலும், அந்த வீரர் ஒரு மாநில கிரிக்கெட் அமைப்பில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
இரண்டு லிஸ்ட் ஏ அல்லது முதல் தர போட்டிகளில் இருக்க வேண்டும் என்பதோடு, அதில் ஒரு போட்டி பிசிசிஐ-யால் நடத்தப்படும் போட்டியாகவும் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் அவர் பிசிசிஐயால் நடத்தப்படும் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடர், துலீப் டிராபி டெஸ்ட் தொடர் அல்லது விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் ஆகிய தொடர்களில் மாநில அணியில் இடம்பெற்று ஒரு போட்டியிலாவது ஆடி இருக்க வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு வீரார் எத்தனை உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்று இருந்தாலும், மாநில அணிக்காக பிசிசிஐ நடத்தும் டி20 தொடர்களில் பங்கேற்று இருந்தாலும் அது ஐபிஎல் ஏலத்துக்கான தகுதியாக கருதப்படாது. தற்போது சமித் டிராவிட் மாநில அளவில் நடைபெறும் மகாராஜா தொடரில் விளையாடி வருகிறார். அடுத்து அவர் கர்நாடகா டி20 அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இவை எதுவும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் தகுதியை அவருக்கு பெற்றுத் தராது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஐபிஎல் மெகா ஏலத்துக்கான அறிவிப்பு வெளியாகும். அதற்கு முன்னர் சமித் இந்த தகுதிகளை பெறுவது கடினமாகும். முதலில் கர்நாடக மாநில ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியில் அவர் இடம் பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அடுத்த ஆண்டு ரஞ்சிடிராபி அல்லது விஜய் ஹசாரே தொடருக்கான கர்நாடக மாநில அணியில் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் சமித் டிராவிட் இன்னும் ஓராண்டு காத்திருந்து இரண்டு உள்ளூர் போட்டிகளில் ஆடினால் மட்டுமே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியும்.