மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மெகா ஏலத்திற்கு முன் நிர்வாக ரீதியாகவும் ஒவ்வொரு அணியும் மாற்றங்களை செய்ய முடிவு எடுத்துள்ளன. ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.
இதனால் புதிய பயிற்சியாளர்களை நியமிக்க இரு அணிகளின் நிர்வாகங்களும் தேடி வருகின்றன. இதனிடையே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக செயல்பட்டு வரும் சங்கக்காரா, விரைவில் பொறுப்பில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் அணிக்காக 4 ஆண்டுகளாக சங்கக்காரா இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு கீழ் ராஜஸ்தான் அணி முன்னணி அணிகளில் ஒன்றாக உள்ளது. இதனிடையே இங்கிலாந்து அணியின் ஒயிட் பால் பயிற்சியாளர் மேத்யூ மாட் பதவி விலகிய நிலையில், அந்த பொறுப்புக்கு சங்கக்காராவை கொண்டு வர பட்லர் யோசனை கொடுத்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் பட்லருடன் சங்கக்காரா பணியாற்றியுள்ளார்.
அவரின் அணுகுமுறை பிடித்ததன் காரணமாகவே இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்புக்கு சங்கக்காராவை கொண்டு வர பட்லர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் சார்பாக சங்கக்காராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இசிபி நிர்வாகம் விரைவில் சங்கக்காராவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் ராஜஸ்தான் அணி சங்கக்காராவின் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிறசியாளர் பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட், டி20 உலகக்கோப்பையுடன் பணியை நிறைவு செய்தார். இதன்பின் அவர் ஓய்வில் இருந்த வரும் நிலையில், அவரை தங்களின் ஐபிஎல் அணிக்கு ஒப்பந்தம் செய்ய பல்வேறு அணிகளும் முயற்சித்து வருகின்றன.
ஆனால் என்சிஏ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டிருக்கிறார். அந்த அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுடன் நல்ல உறவில் இருப்பதால், நிச்சயம் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியின் இயக்குநர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.