ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. அதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் பெங்களூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், சஞ்சு சாம்சன் ஜெய்ப்பூரிலேயே தங்கி இருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும், அதற்காக அவர் அணியின் சொந்த நகரமான ஜெய்ப்பூரிலேயே தங்க வைக்கப்பட்டு மருத்துவ உதவியாளர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் அவரது உடல் தகுதி குறித்துத் தாங்கள் முடிவு எடுத்து வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அந்த போட்டியில் ரியான் பராக்தான் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். தற்போது, மீண்டும் ரியான் பராக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. அப்போது ரியான் பராக்தான் தற்காலிக கேப்டனாக மூன்று போட்டிகளுக்குச் செயல்பட்டார். அந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக மட்டும் இருந்தார். தற்போது, வயிற்றுக் காயம் காரணமாக மீண்டும் இரண்டு போட்டிகளில் மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் சிக்கியிருப்பது பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.