சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், 2025 ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என பரவலாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சிஎஸ்கே அணியில் எந்த வீரரை கொடுத்துவிட்டு சஞ்சு சாம்சனை மாற்றம் செய்து கொள்வார்கள்? அவருக்கு இணையாக சிஎஸ்கேவில் ஒரு வீரர் கூட இல்லை என அவர்கள் கூறி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீண்ட காலமாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் அந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்று வரை அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். அந்த அணி நிர்வாகம் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. மேலும், சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இனி முழு நேரமாக ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. அவர் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் இம்பாக்ட் வீரராக மட்டுமே இடம் பெறுவார். பேட்டிங்கின் போது கடைசி ஒன்றிரண்டு ஓவர்கள் மட்டும் ஆடுவார் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக ஒரு முழு நேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. சில வாரங்களுக்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு மாற இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் அது உண்மை இல்லை என தெரிய வந்தது. அதேபோல, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்து விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தகவல் பரவி வருகிறது.
இது குறித்து சமூக வலைதளங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சிஎஸ்கே ரசிகர்கள் மற்ற அணிகளின் விக்கெட் கீப்பர்கள் சிஎஸ்கே அணிக்கு வரப் போவதாக தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும், சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனுக்கு இணையாக அணி மாற்றம் செய்ய எந்த வீரரும் இல்லை எனவும் கூறி வருகின்றனர்.