ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 48வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
இனி நடைபெறும் ஐந்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி என்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவும் நிலையில் மீண்டும் வெற்றியை பெற வேண்டிய உத்வேகத்தில் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்போது எளிதாக மாறுகிறது.
நாங்கள் பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த விக்கெட் கொஞ்சம் தொய்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன். காய்ந்த நிலையில் இல்லை. ஒருவேளை 190, 200 என்ற ஸ்கோரை எட்ட முடியும் என்று நினைக்கின்றேன். எனினும் ஆடுகளத்தை நன்றாக தெரிந்து கொண்டு அதன் பின் கொல்கத்தா அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும்.
நாங்கள் நிகழ்காலத்தில் தான் எப்போதுமே இருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறோம். முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை எங்களுடைய திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். இதனை தொடர்ந்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே, நாங்கள் ஒரே ஒரு மாற்றத்தை தான் செய்துள்ளோம்.
அணியில் அங்கீத் ராத் வந்திருக்கிறார். ஆடுகளம் குறித்து கணிக்கவே மிகவும் கடினமாக இருக்கின்றது. இந்த ஆடுகளத்தில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என நினைக்கின்றேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற வேண்டும். எனவே நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்ற அணுகுமுறையை எடுத்துள்ளோம். இந்த தொடரில் ஒவ்வொரு ஆடுகளமும் கணிப்பதற்கு கடினமாக இருக்கின்றது. எனவே விளையாடும் போது களத்திற்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். அதேபோல் ஆடுகளத்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது விரைவில் கணிக்க வேண்டும் என்று ரகானே கூறியுள்ளார்.