மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்சிபி ஆல்-ரவுண்டரான அவர், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வெல்வார் எனவும் கணித்துள்ளார்.
லீக் கட்டத்தின் முடிவில் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஆர்சிபி அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று, 4-ல் தோல்வியடைந்தனர், மேலும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. ரஜத் படிதார் தலைமையிலான அணி, லீக் கட்டத்தின் கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டு, ஐபிஎல் வரலாற்றில் தங்களது அதிக இலக்கை 228 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது.

மே 29, வியாழக்கிழமை, முல்லன்பூரில் உள்ள மஹாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஜோஷ் ஹேசில்வுட் இந்த சீசனில் ஆர்சிபியின் முக்கிய வீரர்களில் ஒருவராக விளங்கியுள்ளார். அவர் 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 17.28 சராசரியுடன் வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர், காயம் காரணமாக கடைசி சில போட்டிகளில் விளையாடவில்லை, இதனால் ஆர்சிபி அணி ஒவ்வொரு போட்டியிலும் 200-க்கு மேல் ரன்களை விட்டுக்கொடுத்தது. இருப்பினும், பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் அவர் அணிக்குத் திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள வாட்சன்,
"2025 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை, ஆர்சிபி தான் வெல்லும் என்று நினைக்கிறேன். எனக்கு ஆட்டநாயகனாக விராட் கோலி விருதை வெல்வார். இதற்கு காரணம், இது ஆர்சிபியின் நேரம் என்று எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது. தொடரின் இறுதி கட்டத்தில் அவர்களுக்கு சில தடைகள் ஏற்பட்டாலும், ஜோஷ் ஹேசில்வுட் பிளேஆஃப்களுக்குத் திரும்புவதால், இது ஆர்சிபியின் ஆண்டாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்," என்று வாட்சன் கூறினார். கடந்த இரண்டு போட்டிகளில் ஜிதேஷ் ஷர்மா ஆர்சிபி அணியை வழிநடத்தினார். தற்போது ரஜத் பட்டிதார் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், அவர் இன்று கேப்டனாக திரும்பி உள்ளார்.