மும்பை: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்குர் நேற்று நடந்த 2024 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் படுமோசமான பவுலிங் ரெக்கார்டை செய்து இருக்கிறார். இதை அடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கியதில் தவறே இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.
2024 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரளா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடியது. இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்குர் 4 ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சையது முஷ்டாக் அலி தொடரின் வரலாற்றில் இதுவே மோசமான பந்து வீச்சு ஆகும். இதே ஆண்டு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் ராகுல் 4 ஓவர்களில் 69 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார்.

அந்த சாதனையை சமன் செய்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார் ஷர்துல் தாக்குர். இந்த போட்டியில் அவரது மோசமான பந்து வீச்சால் கேரளா அணி 20 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ரோகன் குன்னம்மால் 48 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சல்மான் நிசார் 49 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அடுத்து மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அஜின்க்யா ரஹானே 35 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தது அதிகபட்சமாக இருந்தது. 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ஷர்துல் தாக்குரை சிஎஸ்கே அணி விடுவித்த போது, ஏலத்தில் எப்படியும் அவரை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.
ஆனால், ஷர்துல் தாக்குர் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட போது எந்த ஒரு அணியும் அவரை வாங்க முன் வரவில்லை. சிஎஸ்கே அணியும் அவரை வாங்க முன் வராதது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் சரியான முடிவைதான் எடுத்து இருக்கிறது என தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.