சென்னை: தோனியுடனான தனது ஆசை ஒன்று கடைசி வரை நிறைவேறாமல் போய் விட்டது எனக் கூறி இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபே கூறி இருக்கிறார். அந்த ஆசை நிறைவேறாத போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கீழ் ஆடியது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல முன்னணி வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். துவக்கத்தில் சராசரி வீரர்களாகவே இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை மெருகேற்றி, அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து இன்று உலகின் முன்னணி வீரர்களாக மாற அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தார் தோனி.

அதேபோல இப்போதும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அவர்களை அனுப்பி வருகிறார். அப்படி ஒரு வீரர் தான் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சிவம் துபே. 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேரும் முன் சிவம் துபே மிக மோசமான டி20 வீரராக அறியப்பட்டார்.
பேட்டிங் ஆடத் தெரியாத, பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு வீரராகவே பார்க்கப்பட்டார். ஆனாலும், அவரை சிஎஸ்கே அணியில் தேர்வு செய்த தோனி, அவரை முழுநேர பேட்ஸ்மனாக மாற்றிக் காட்டினார். பின்னர் அவர் மிடில் ஓவர்களில் உலகின் அச்சுறுத்தும் டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக மாறினார். இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிவம் துபே தோனி குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அப்போது, "எனக்கு தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால். நான் இந்திய அணியில் அறிமுகம் ஆகும் முன்பே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அதனால் எனது கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. ஆனாலும், அவரது கேப்டன்சியில் நான் சிஎஸ்கே அணிகள் ஆடியதை பெருமையாக கருதுகிறேன்." என்று கூறினார்.
மேலும், "எனது ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு தோனி தந்த சிறிய அறிவுரை உதவியது. அது சிறிய அறிவுரையாக இருந்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலில் நான் தோனியை அணுகுவதற்கு பயந்தேன். ஆனால், ஐபிஎல் தொடரில் இப்போது அவருடன் நெருக்கமாக பழக முடிகிறது. நான் எப்போதும் தோனியின் ரசிகர் தான். அவரைப் பார்த்து வியந்து போகிறேன். அவர் மீது இருக்கும் மரியாதை எனக்கு எப்போதும் அதேபோலத்தான் இருக்கும்." என்றார் சிவம் துபே.