அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதைப் பற்றி முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருந்தார். அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று இருந்தது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியையும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

அதிலும், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தானே முன் நின்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். 41 பந்துகளில் 87 ரன்கள் அடித்தார். இந்த நிலையில், ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் ஸ்ரேயாஸ் ஐயரை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் நவ்ஜோத் சிங் சித்து.
தோனி மற்றும் ரோகித் சர்மா கிட்டத்தட்ட ஒரே அணியை வைத்துத்தான் ஒவ்வொரு ஆண்டும் விளையாடினார்கள்; ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு அணியை (பஞ்சாப் கிங்ஸ்) ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து ஆரம்பித்து, கட்டமைத்து, அந்த அணியை வைத்து ஐபிஎல் இறுதிப் போட்டி வரை வந்துள்ளார் என பாராட்டி இருக்கிறார்.
இது பற்றி நவ்ஜோத் சிங் சித்து பேசியதாவது: "ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன்? 7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று வெற்றி பெற்றார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். இது விபத்து அல்ல; இது எதேச்சையாக நடந்த ஒரு விஷயம் அல்ல."
"ரோஹித் சர்மா மற்றும் தோனி சிறந்த கேப்டன்கள். ஆனால், அவர்கள் ஒரே ஒரு அணியை வைத்து ஆடினார்கள். அவர்கள் இதைப்போல செய்யவில்லை. அவர்கள் ஒரு அணியை சாதாரண வீரர்களை வைத்து விளையாடவில்லை. அவர்கள் சிங்கத்தை அதன் புகலிடத்திற்குச் சென்று வீழ்த்தவில்லை. ஒட்டுமொத்த உலகமும் ஒரு பக்கம் இருந்தது, அதாவது மும்பை இந்தியன்ஸ் பக்கம் இருந்தது. ஆனாலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கிறது."
"ஒரு கேப்டன் என்பவர் முன் நின்று அணியை வழிநடத்த வேண்டும். அவர் ரீஸ் டாப்லியின் ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்தார். அதன் பிறகு சிக்ஸர்கள் மழை போலப் பொழிந்தன. இந்த ஆள் தனிநபர் ராணுவம் போலத் தானே முன் நின்று போட்டியை முடித்தார். ரிக்கி பாண்டிங்கை நாம் மறக்கக்கூடாது. இவர்கள் இருவரும் சந்திரகுப்த மௌரியா மற்றும் சாணக்கியனின் கூட்டணி." இவ்வாறு நவ்ஜோத் சிங் சித்து பாராட்டி இருக்கிறார்.