மும்பை: ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக மாபெரும் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர் உள்ளூர் போட்டிகளிலும். ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறார். தற்போது ஒரே ஆண்டில் கேப்டனாக இரண்டு டி20 கோப்பைகளை வென்று அசத்தி இருக்கிறார்.
2024 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை மாநில அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். மத்திய பிரதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கோப்பை வென்ற அவர் தற்போது, 2024 சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். இதன் மூலம், எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை ஒன்றை அவர் செய்து இருக்கிறார்.
ஒரே ஆண்டில் சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் கோப்பை வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார். இதற்கு முன் எப்போதும் சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் ஒரு மாநில அணியின் கேப்டனாக இருந்தவர், ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக கோப்பை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் ஆக இதுவரை கோப்பை வென்ற தோனி, கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்கள் மாநில அணியில் இடம் பெற்று சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் கேப்டனாக பங்கேற்றது இல்லை.
அதன் காரணமாகவே அவர்கள் சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் கேப்டனாக செயல்பட்டு கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மும்பை அணியில் இடம் பெற்று தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.
அதன் காரணமாக இந்த சாதனையையும் அவரால் செய்ய முடிந்து இருக்கிறது. சமீபத்தில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த அணியின் கேப்டனாக செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் சையது முஷ்டாக் அலி ட்ராபி தொடரில் தனது மாநில அணியான மும்பை கேப்டனாக கோப்பை வென்று கொடுத்து இருப்பது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.