ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 59 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வீசும்போது ஸ்ரேயாஸ் ஐயர் தான் களத்திற்கு வந்திருந்தார். மேலும் பேட்டிங்கும் ஆடிய ஸ்ரேயாஸ் 25 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
பஞ்சாப் அணி 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இந்த பொறுப்பான ஆட்டம் அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியது. இந்த தருணத்தில் பஞ்சாப் அணி பில்டிங் செய்த போது ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வரவில்லை.

அவருக்கு பதில் ஷசாங் சிங் தான் தற்காலிக கேப்டனாக பணிபுரிந்தார்.
அதன் பிறகு தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேற்று பயிற்சியில் காயம் ஏற்பட்டதாகவும், அணியின் நலனை கருதி காயத்தை மீறி பேட்டிங் செய்ததாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து போட்டி முடிவடைந்த பிறகு பேசிய ஸ்ரேயாஸ், எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் நேற்று பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று பந்து என் கையில் பட்டது. இதில் என்னுடைய விரல் காயம் அடைந்தது. இந்த காயம் குறித்து தற்போது சிகிச்சை எடுத்து வருகின்றேன். ஆனால் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால் பேட்டிங் செய்ய வந்தேன். நான் இன்று விளையாட மாட்டேன் என்று ஏற்கனவே அணி வீரர்களுடன் சொல்லிவிட்டேன்.
எதிரணி வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது நமது உடல் மொழி மாறுவது இயல்புதான். ஹர்பிரித் பிரார் வலை பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டார். இன்று அவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார். அவருடைய மனவலிமை பாராட்டத்தக்க வகையில் இருக்கிறது.
இந்த போட்டியை எங்கள் அணி வீரர்கள் சரியான முறையில் எதிர்கொண்டு கையாண்டார்கள். இந்த உத்வேகம் தான் எங்கள் அணி வீரர்களுக்கு வேண்டும். இன்று அனைவரும் சிறந்த உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள். எந்த வித சூழ்நிலையில் இருந்தாலும் சரி நேர்மறையான எண்ணங்களுடன் களத்தில் செயல்பட்டு வெற்றிக்காக போராட வேண்டும்.
ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் சேர்ப்பதில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். இன்றைய ஆட்டத்தின் அடிக்கப்பட்ட பெரும்பாலான ரன்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிரானவை. எந்த சூழ்நிலையிலும் போட்டியில் நம்மால் மாற்ற முடியும். அதற்கான நம்பிக்கை மட்டும் வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.