முல்லன்பூர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். கேகேஆர் அணி நிர்வாகம் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையில் மோதல் இருந்து வந்தது. இதனால் கேகேஆர் அணியின் பவுலிங்கை விளாசி தள்ளுவார் என்று பார்க்கப்பட்ட போது, புஸ்வானமாக ஸ்ரேயாஸ் ஐயர் 2 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறியது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், கோப்பையை பெற்ற போதும் அவரை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேகேஆர் அணிக்கு இடையில் மோதல் இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் வென்று பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் வைபவ் அரோரா வீசிய 3வது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது.
இந்த நிலையில் ஹர்சித் ராணா வீசிய 4வது ஓவரில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். அவர் எதிர்கொண்ட 2வது பந்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினார். அவர் கொடுத்த கேட்சை ரமன்தீப் சிங் டைவ் அடித்த பிடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகியதால், மைதானத்தில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை முன்னதாக கேகேஆர் அணி பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் மொத்தமாக அமைதியாகினர். இது ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 250 ரன்களை விளாசி இருக்கிறார். குறிப்பாக பவுன்சர் பந்துகளுக்கு தரமான பதிலடி கொடுத்து அபாரமான ஃபார்மில் இருந்த அவர் ஆட்டமிழந்திருப்பதால், பஞ்சாப் அணி கவுரவமான இலக்கை எட்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.