கொல்கத்தா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது. இந்த சூழலில் வீரர்களை தக்க வைக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எவ்வளவு சம்பளம் வழங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

ஸ்ரேயாஸ், தம்மை முதல் வீரராக தேர்வு செய்வார்கள் என்று நினைத்த நிலையில் கொல்கத்தா அணி நிர்வாகம் அவருக்கு 14 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்களான ஆண்ட்ரூ ரசூல் மற்றும் சுனில் நரேன் ஆகியோருக்கு 18 கோடி மற்றும் 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க கொல்கத்தா அணி முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
மேலும் ரஸில் கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்திருப்பதால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் ஸ்ரேயாஸ், கொல்கத்தா அணியை விட்டு விலக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை கொல்கத்தா அணியிலிருந்து ஸ்ரேயாஸ் விலகினால் அவரை பெருந்தொகை கொடுத்து எடுக்க ஆர்சிபி,பஞ்சாப் அணிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
ஏனென்றால் தற்போது ஆர்சிபி அணியிலும் பஞ்சாப் அணியிலும் கேப்டன் இல்லை இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் அணியிலிருந்து வந்தால் அவருக்கு கேப்டன் பதவியுடன் 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஏலத்தில் எடுக்க இவ்விரு அணிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ஐபிஎல் மெகா ஏலம் இம்முறை கலை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.