கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 39-வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், குஜராத் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி நல்ல பார்மில் உள்ள நிலையில் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் களமிறங்குகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகானே, நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது.

இதனால் முதலில் பந்து வீசும் போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு புரியும். நாங்கள் வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகின்றோம். நாங்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் பாசிட்டவாக இருக்கின்றோம். எங்கள் அணியின் நடுவரிசை வீரர்கள் குறித்து எந்த கவலையும் இல்லை.
எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. குர்பாஷ் மற்றும் மோயின் அலி ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், இன்றைய ஆட்டத்தின் போது பனிப்பொழிவு இருக்காது என நினைக்கிறேன். இன்றைய போட்டி ஒரு நல்ல ஆட்டமாக தான் இருக்கும்.
எங்கள் அணியின் பௌலிங் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவுகிறார்கள். ரஷீத் கான் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது ஒட்டுமொத்த அணிக்கும் சிறந்த விஷயமாகும். அவர் போல ஒரு வீரர் அணியில் இருக்க ஒவ்வொரு கேப்டனும் விரும்புவார் என்று கில் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் டேனியல் மோரிஷன், உங்களுக்கு கல்யாணம் என்று கேள்விப்பட்டோமே, அது உண்மையா என்று கேட்டார். அதற்கு வெட்கப்பட்ட கில் அப்படியெல்லாம் இல்லையே யார் சொன்னது என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். டேனி மோரிஷன் ஏன் இந்த கேள்வியை கேட்டார். கில்லுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுகிறதா என்று பலரும் இதன் மூலம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.