பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர் சி பி அணி பேட்டிங்கில் தடுமாறியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பெங்களூருவில் ஆர்சிபி அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை இன்று விளையாடுகிறது.
விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்சிபி அணியை கொண்டாடி வந்தனர்.இந்த சூழலில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் குஜராத் அணி பிளேயிங் லெவனில் வெறும் இரண்டு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஆர் சி பி அணிக்காக விளையாடி வந்த சிராஜ் நீக்கப்பட்டு தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனால் ஆர்சிபி மீதான கோபத்தை இன்று வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சிராஜின் வேகத்திற்கு பதில் கொடுக்க முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாறினர். பில் சால்ட் 14 ரன்களிலும், தேவுதட் படிக்கல் நான்கு ரன்களிலும் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அர்சத் கான் பந்துவீச்சில் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதேபோன்று கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்கள் மட்டுமே சேர்க்க ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஜிதேஷ் சர்மா மற்றும் லிவிங் ஸ்டோன் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ஆர் சி பி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.ஜித்தேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க குர்னல் பாண்டியா ஐந்து ரன்களில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய விவிங்ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் ஆர்சிபி அணி 104 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது இறுதியில் டிம் டேவிட் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். இதனால் ஆர் சி பி அணி கௌரவமான இலக்கை எட்டியது.டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஆர்சிபி அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் ஜாஸ் பட்லரின் வெறி ஆட்டத்தால் அந்த அணி 13 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றது. சிராஜின் அபார பந்துவீச்சு ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.