டெல்லி: முக்கியமான ஐபிஎல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் சவுரவ் கங்குலி இருப்பதாக கூறப்படுகிறது. பாண்டிங்கை விமர்சித்து கங்குலி அளித்து இருக்கும் பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி பொதுவெளியில் அறிவிக்கும் முன்பே, சவுரவ் கங்குலி மேற்கு வங்காள பத்திரிகையான "ஆஜ்கல்"-ற்கு அளித்த பேட்டியில் அந்தத் தகவலை தெரிவித்து இருந்தார். அதன் பின்னரே டெல்லி கேபிடல்ஸ் அணி, ரிக்கி பாண்டிங் வெளியேற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பாடு குறித்து அந்த பேட்டியில் சவுரவ் கங்குலி கூறி இருந்த விஷயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 7 ஆண்டுகள் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ரிக்கி பாண்டிங். அதே காலகட்டத்தில் சவுரவ் கங்குலியும் அந்த அணியுடன் ஆலோசகராக பயணித்தார். கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வாகும் முன்பும், அதன் பின்பும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார்.
இந்த காலகட்டத்தில் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் அவர் நெருக்கமாக இணைந்து அந்த அணியின் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பாண்டிங் குறித்து கங்குலி அளித்த அந்த பேட்டி - "நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான திட்டங்களை செய்ய வேண்டும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக நான் ஒரு முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மெகா ஏலம் வர இருக்கிறது. எனவே, நான் இப்போது இருந்தே அதற்கான திட்டத்தை தொடங்க வேண்டும். நான் ஒரு செய்தியை இங்கே உடைக்கிறேன். ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார்."
"ரிக்கி பாண்டிங் குறித்து ஜெஃப்ரி பாய்காட் சொன்னது சரிதான். கடந்த ஏழு ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணியை எந்த வகையிலும் முன்னே கொண்டு செல்லவில்லை. இது குறித்து நான் அந்த அணி நிர்வாகத்திடம் பேச வேண்டும். இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என சொல்லப் போகிறேன். நான் கூட தலைமை பயிற்சியாளராக இருக்கலாம். நான் எப்படி செயல்படுகிறேன் எனப் பார்ப்போம்" இவ்வாறு கங்குலி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
டெல்லி-க்கு ஜாக்பாட்..இந்தியாவின் மிகப்பெரிய மால், சுடசுட ரெடியாகிறது..!!
ரிக்கி பாண்டிங் கடந்த ஏழு ஆண்டுகளில் டெல்லி அணியை எந்த வகையிலும் முன்னேற்றவில்லை என கங்குலி பேசி உள்ளது ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால், அதில் வெற்றி பெற முடியவில்லை. அடுத்து 2021 ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. எனினும், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த இரண்டு ஆண்டுகள் பாண்டிங் தலைமையில் அந்த அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன.
அப்படி இருந்தும் பாண்டிங் குறித்து கங்குலி விமர்சனம் செய்து பேசி இருக்கிறார். அதனால், ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலி இடையே விரிசல் ஏற்பட்டிருந்ததா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது. கங்குலி அளித்த அதிர்ச்சிகரமான பேட்டி பரவிய, அடுத்த சில மணி நேரங்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி ரிக்கி பாண்டிங் உடனான பயணம் முடிவுக்கு வந்ததாக அறிவித்து, அவருக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம் பாண்டிங் தாமாக விலகவில்லை என்பதும் தெளிவாக தெரிய வந்துள்ளது. அவரது ஒப்பந்த காலமும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து கங்குலி டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.