டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தெற்கு டெல்லி அணிக்காக ஆடி வரும் 23 வயதாகும் பிரியன்ஷ் ஆர்யா என்ற வீரர் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி புதிய சாதனையை படைத்துள்ளார். வடக்கு டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மனன் பரத்வாஜ் வீசிய ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட பிரியன்ஷ் ஆர்யாவின் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போல டெல்லி இந்த ஆண்டு முதல் டெல்லி பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் வடக்கு டெல்லி அணியை எதிர்த்து தெற்கு டெல்லி அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் தெற்கு டெல்லி அணி சார்பாக பிரியன்ஷ் ஆர்யா - சர்தக் ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக தொடங்கிய சர்தக் ரே 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் பிரியன்ஷ் ஆர்யா - ஆயுஷ் பதோனி கூட்டணி இணைந்தது. இருவருமே தொடக்கம் முதலே பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்ட தொடங்கினர். அதிலும் மனன் பரத்வாஜ் வீசிய 6வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 24 ரன்களை விளாசினார்.
மறுபுறம் சுயாஷ் சர்மா பவுலிங்கில் பிரியன்ஷ் ஆர்யா சிக்சர்களாக வெளுத்து கட்டினார். இதனால் 23 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பிரியன்ஷ் ஆர்யா, 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அப்போது 12வது ஓவரை வீச மனன் பரத்வாஜ் மீண்டும் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் மனன் பரத்வாஜ் எந்த பக்கம் பவுலிங் செய்தாலும், பந்து நேராக பவுண்டரி எல்லையை கடந்து விழுந்தது.

ஹாட்ரிக் சிக்சருக்கு பின்னரும் பிரியன்ஷ் ஆர்யா வெளுத்து கட்ட, பின்னர் மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைகளில் அடுத்த 3 சிக்சர்களை பிரியன்ஷ் ஆர்யா பறக்கவிட்டார். 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக அந்த ஓவரில் மட்டும் 36 ரன்கள் விளாசப்பட்டது. அதிரடியாக ஆடிய அவர் 40 பந்துகளில் சதத்தை எட்டி சாதனை படைத்தார்.
டெல்லி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிப்பது சாதாரண விஷயமல்ல. 23 வயதாகும் இடதுகை பேட்ஸ்மேனான 50 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெல்லி பிரீமியர் லீக் தொடரில் மட்டும் பிரியன்ஷ் ஆர்யா 8 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 576 ரன்களை விளாசி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சையத் முஷ்டாக் அலி தொடரில் பிரியன்ஷ் ஆர்யாவின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரிலும் பிரியன்ஷ் ஆர்யா பேட்டிங் ஃபார்மை தொடரும் பட்சத்தில், அவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகும். டெல்லி மைதானத்தில் மட்டுமல்லாமல் மற்ற மைதானங்களிலும் பிரியன்ஷ் ஆர்யாவால் எப்படி விளையாட முடியும் என்பதை அறியும் வாய்ப்பாகவும் சையத் முஷ்டாக் அலி தொடர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.