IPL 2025:37 பந்துகளில் கிளாசன் சதம்..300 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை வீணடித்த SRH..278 ரன்கள் குவிப்பு
டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து அசத்திருக்கிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் 39 பந்துகளில் 105 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆக்ரோஷமாக விளையாட முற்பட்டு சில சாதனைகளை படைத்தாலும், பல போட்டிகளில் வேதனைகளே மிஞ்சியது. ஆனால் இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் விளையாடியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அபாரமாக விளையாடினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் டிராவிஸ் ஹெட், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரி, சிக்ஸர்கள் என்ன பறக்க விட 26 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சிக்ஸர், 6 பவுண்டரி அடங்கும். ஆனால் இதையே பெரிதாக நினைத்த ரசிகர்களுக்கு இன்னொரு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் ஹென்றிச் கிளாசன் எரிமலை போல் வெடித்து சிதறினார். டெல்லி மைதானத்தில் நான்கு பக்கமும் பவுண்டரி, சிக்ஸர்கள் என அவர் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார்.
17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த ஹென்றிச் கிளாசன், அத்துடன் நிறுத்தாமல் டாப் கியரில் பேட்டிங் செய்தார். எந்த பவுலர் வந்தாலும் அடி உதைதான் என்று பேட்டிங்கை ஹென்றிச் கிளாசன் நகரத்தினார். ஒரு கட்டத்தில் அதிவேக சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது, கொல்கத்தா அணி வீரர்கள் சில யாக்கர் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஹென்றிச் கிளாசன் சதம் கொஞ்சம் தாமதமானது.
கடைசியாக 37 பந்துகளில் ஹென்றிச் கிளாசன் சதம் அடித்தார். ஆட்டம் முடிவில் 39 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இதில் 7 பவுண்டரி, ஒன்பது சிக்ஸர்கள் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 269 என்று அளவில் இருந்தது. சன்ரைசர்ஸ் அணி 10 புள்ளி மூன்று ஓவரில் எல்லாம் 150 ரன்கள் கடந்து இருந்தது.
அதேபோன்று 14.4 ஓவரில் 200 ரன்களை கடந்ததால் முதல்முறையாக ஐபிஎல் வரலாற்றில் 300 ரன்கள் எடுக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொல்கத்தா அணி வீரர்கள் சில ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் 300 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் தொட முடியவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச மூன்றாவது ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்திருக்கிறது. 20 ஓவர் முடிவில் அந்த அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களை குவித்து இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச அணி ஸ்கோர் டாப் 4 இடத்திலும் சன்ரைசர்ஸ் அணி தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications