டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவர்களுடைய பேட்டிங் கிளிக் ஆகும்போது பட்டையை கிளப்புகிறார்கள். தங்களது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட அவர்கள், அந்த அணியின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர்.
கடந்த சீசன் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு தற்போது பழித்தீர்க்கும் விதமாக சன்ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தன. பந்துவீச்சிலும் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 168 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வீரர் கிளாசன் 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். சன்ரைசர்ஸ் அணி 23 கோடி கொடுத்து கிளாசனை தக்க வைத்தது. அதற்கு ஏற்ற வகையில் கிளாசன் அபாரமாக விளையாடி இருக்கிறார். விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் 12 இன்னிங்ஸ்களில் அவர் 20 ரன்கள் மேல் அடித்திருக்கிறார். தற்போது இதற்கு முத்தார்ப்பாய் சதம் அடித்து காவியா மாறனின் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எங்களுக்காக அணி நிர்வாகம் பல கோடி ரூபாயை செலவழிக்கிறது. நாங்கள் இந்த சீசனில் நல்ல தொடக்கத்தையும் பெறவில்லை. தொடரில் நடுவிலும் சொதப்பினோம். எனினும் கடைசி மூன்று போட்டிகளில் எப்படியாவது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று கடுமையாக போராடி விளையாடி இருக்கின்றோம்.
இதன் மூலம் ரசிகர்களுக்கு எங்களால் கொஞ்சமாவது சந்தோஷத்தை திருப்பி தர முடியும் என்று நினைத்தோம். அது மட்டும் இல்லாமல் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் தனி பெருமை இருக்கின்றது. நான் சில போட்டிகளில் நினைத்த மாதிரி அதிரடி காட்ட முடியவில்லை. ஆனால் இன்று என்னால் முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்.
இந்த மைதானத்தில் நேராக பந்தை அடிக்கும் போது ரன் கிடைக்கும் என நினைத்தேன். அதற்கு தகுந்தார் போல் என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்டு விளையாடினேன். என்னுடைய ஷாட்கள் அனைத்தும் பவுண்டரி லையனை தாண்டி விழுந்தது பார்க்கும்போது மகிழ்ச்சி அளித்தது. இதேபோன்று பவுலர்கள் எந்த லெங்த்தில் வீசுகிறார்கள் என்பதை கணித்து விளையாடுவது குறித்து பயிற்சிகளை மேற்கொண்டேன்.
ஏனென்றால் அதில் தவறு செய்து இரண்டு முறை நான் ஆட்டம் இழந்தேன். எனவே இதற்காக நான் கடுமையான வலை பயிற்சியில் ஈடுபட்டேன். பவர் பிளே முடிவு அடைந்தவுடன் நான் அதிரடி காட்டுவேன். எப்போதெல்லாம் களத்திற்கு செல்கிறோமோ, அப்போதெல்லாம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பதற்கு தான் நான் சம்பளம் வாங்குகிறேன் என்று எந்த கிளாசன் கூறியுள்ளார்.