மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணி நடப்பு சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி நாளை லக்னோவில் எல் எஸ் ஜி அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக டிராவிஸ் ஹெட், இந்தியா வர இருந்தார். ஆனால் தற்போது அவர் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து சன்ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி தெரிவித்து இருப்பது தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டி வைத்த கொரோனா ஐபிஎல் தொடரையும் விட்டு வைக்காமல் இருந்தது. இதனால் ஐபிஎல் தொடர் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டதால் ஆஸ்திரேலியா சென்றிருந்த டிராவிஸ் ஹெட் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இந்தியா வருவதில் தாமதமாக இருக்கிறது. முன்பு போல் கொரோனாவுக்கு என எந்த ஒரு விதிமுறைகளும் தற்போது விதிக்கப்படுவதில்லை.
குவாரண்டைன் விதிகளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடையாது. கொரோனா தொற்று இருந்தும் விளையாடலாம் என்ற விதியும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கிறது. எனினும் ஆஸ்திரேலிய வீரரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.