ஐதராபாத் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் முன்னிட்டு மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது? எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறது என்பது குறித்து இம்மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக தடுமாறிய நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்றது.

பாட் கம்மின்சை 20 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து காவியா மாறன் வாங்கி இருந்தார். இந்த சூழலில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் கம்மின்சை தேர்வு செய்ய காவியா மாறன் முயற்சி செய்தார். இதனால் அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து முதல் வீரராக ஏலத்தில் தக்க வைக்க அவர் யோசித்தார்.
இந்த நிலையில் கம்மின்ஸ் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வரமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, பேட் கம்மின்ஸ் ஒருமுறை பேசும்போது அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வருவாரா இல்லையா என்று தெரியாது என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு வேறு பெரிய தொடர்கள் ஏதும் இல்லை என்றாலும் ட்ரெட்மிலில் தொடர்ந்து ஓடுவது போல் இருப்பதால், இது தமக்கு கடினமாக இருப்பதாக பாட் கம்மின்ஸ் கூறி இருப்பதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்களின் முன்னுரிமை ஐபிஎல் ஆக இருக்காது என்றும் அவர்கள் ஆசஸ் மற்றும் உலகக்கோப்பை போன்ற தொடர்களை தான் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் புதிய விதிப்படி இனி மெகா ஏலத்திற்கு பெயர் கொடுக்கும் வீரர்கள் மட்டும்தான் அடுத்த இரண்டு ஏலங்களிலும் பங்கேற்க முடியும் என்று பிசிசிஐ விதித்துள்ள விதி தங்களுக்கு எதிராக இருப்பதாக கம்மின்ஸ் சுட்டி காட்டி இருப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனால் இம்முறை சன்ரைசர்ஸ் அணி கம்மின்சை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்றும், இதனால் புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பில் சன்ரைசர்ஸ் இருப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.