மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கான விதிகளை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைக்கும் முறை குறித்து விளக்கம் அளித்துள்ள பி சி சி ஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு சாதகமாக இருக்கும் வகையில் ஒரு விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகள் விளையாடாத வீரர்களை uncapped வீரராக கருதலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் அவர்களுக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் தோனி போன்ற வீரருக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் என்றால் அது மற்ற அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று காவியா மாறன் உள்ளிட்ட அணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்த விதியை மாற்ற வேண்டும் என்றும் இது சிஎஸ்கே போன்ற அணிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பிசிசிஐ அறிவித்த இந்த விதிக்கு சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் மூடி பிசிசிஐ அறிவித்த இந்த விதி மிகவும் சிறப்பானது. இதன் மூலம் நல்ல உடல் தகுதி இருந்தால் ஒரு வீரர் எவ்வளவு ஆண்டு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இதன் மூலம் குறிப்பிட்ட தகுந்த வீரர் அணியில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பணியை பெரிய அளவில் சிறப்பாக செய்ய முடியும் தோனியை எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமே அவர்தான். அவர் இல்லாமல் ஒரு அணியை கட்டமைக்க முடியாது.
தற்போது இந்த விதியின் மூலம் குறைந்த விலையில் தோனியை சிஎஸ்கே அணியில் தேர்வு செய்து கொள்ள முடியும். எனவே எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தோனி போன்ற மிகச் சிறந்த வீரர்கள் எவ்வளவு காலம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு இது ஐபிஎல் தொடருக்கு நன்மையை தரும்.இந்த விதி ஐந்து ஆண்டுகள் விளையாடாமல் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறது.
இதனை மாற்றி மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை என்றால் அவரை ஐபிஎல் போட்டிகளில் uncapped வீரராக சேர்ப்பதன் மூலம் பல வீரர்கள் பலன் பெறுவார்கள். இந்திய அணியிலே பலவீரர்கள் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எனவே இந்த விதியை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.