மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், 10 அணிகளின் உரிமையாளர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தரப்பில் பழைய விதிகளை பின்பற்ற கோரிய நிலையில், சிஎஸ்கே தரப்பில் தோனியை தக்க வைக்க ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல் மும்பை மற்றும் கேகேஆர் அணிகள் தரப்பில் மெகா ஏலமே இனி தேவையில்லை என்றும், வரும் காலங்களில் மினி ஏலமே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பேசிய கருத்துகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அதன்படி, வீரர்களை தக்க வைப்பதில் பிசிசிஐ 2 வகையான வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது குறைந்தது 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் அல்லது 6 ஆர்டிஎம் வாய்ப்புகள் மூலம் அணிகளுக்கு வழங்க வேண்டும். ஒருவேளை பழைய பாணியில் 4 வீரர்களை தக்க வைக்கப்படும், 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுத்தாலும் சரியாகும். ஏனென்றால் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு ஸ்டைலில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சில அணிகளில் உள்ளூர் வீரர்கள், சில அணிகளில் இந்திய வீரர்கள், ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்கள். எங்களுக்கு வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க ஆர்டிஎம் வாய்ப்புகள் தேவையாக உள்ளது. அதேபோல் சில அணிகளுக்கு இந்திய வீரர்களை தக்க வைக்க ரீடென்ஷன் பாலிசி தேவையாக உள்ளது. இதனால் பிசிசிஐ 2 வகையையும் கொடுத்து அணிகளின் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த முறை மெகா ஏலம் நடந்த போது ஆர்டிஎம் வாய்ப்புகள் யாருக்கும் அளிக்கப்படவில்லை. 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் அப்போது லக்னோ மற்றும் குஜராத் என்று 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது எந்த புதிய அணியும் புதிதாக அறிமுகம் செய்யப்படாததால், பிசிசிஐ தரப்பில் மீண்டும் ஆர்டிஎம் வாய்ப்புகள் மட்டும் கூடுதலாக அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக 4 ரீடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகள் மூலமாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள முடியும். இதில் 4 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ தரப்பில் அனுமதி வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.