மும்பை: மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன், டெல்லி உரிமையாளர் கிரண் குமார், லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத், ராஜஸ்தான் உரிமையாளர் மனோஜ், ஆர்சிபி உரிமையாளர் ப்ரத்மேஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மற்ற உரிமையாளர்களான கேகேஆர் அணியின் ஷாரூக் கான், மும்பை அணி உரிமையாளர் அம்பானி உள்ளிட்ட வீடியோ மூலமாக கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் மெகா ஏலமே தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் விவாதங்கள் காரசாரமாக நடந்துள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பேசிய கருத்துகள் வெளி வந்துள்ளன. அதில், 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.. அதேபோல் அதிகளவிலான ஆர்டிஎம் வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். அதனை 4 ரீடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் என்று பிரித்தும் கொடுக்கலாம். அல்லது மொத்தமாக 6 வீரர்களையும் ரீடெய்ன் செய்து கொள்ளவும் அனுமதிக்கலாம்.
அப்படியும் இல்லையென்றால் மொத்தமாக 6 ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுக்கலாம். அந்த ஆர்டிஎம் வாய்ப்புகளை வீரரின் அனுமதியுடன் அணி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ரீடெய்ன் செய்த வீரர்கள் பலரும் தங்களின் ஊதியம் குறைவாக இருப்பதாக கருதுகின்றனர். இதனால் பல்வேறு வீரர்களும் தங்களை முதல் வீரராக ரீடெய்ன் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படி இல்லையென்றால், ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறார்கள்.
இதனை சரி செய்ய ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அப்படி ஆர்டிஎம் வாய்ப்புகளை கொடுக்கும் போது, வீரர் தனது மார்க்கெட் ஊதியத்தை பெற முடியும். ஒருவேளை ஆர்டிஎம் இல்லாமல் தக்க வைக்க மட்டுமே அனுமதி கொடுத்தால், அவர்களுக்கு சில மற்ற ஒப்பந்தங்கள் மூலமாக ஊதியத்தை அளிக்க முடியும். அதேபோல் ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்துவதும் பர்ஸ் தொகை அளவினை வைத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். சிலர் தங்களின் பேங்க் பேலன்ஸை வைத்து ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்த கூடாது.
அதேபோல் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சில அணிகள் வெளிநாட்டு வீரர்கள் மூலமாகவும், சில அணிகள் இந்திய அணிகள் மூலமாகவும், சில அணிகள் இளம் வீரர்கள் மூலமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியை எடுத்து கொண்டால், வெளிநாட்டு வீரர்கள் அதிகளவில் பங்களிக்கின்றனர்.
அதனால் எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களை தக்க வைக்கலாம் என்பதில் எந்த கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் சில வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற பின் கடைசி நிமிடத்தில் விலகுகிறார்கள். காயத்தை தவிர்த்து வேறு காரணத்திற்காக ஒரு வீரர் விலகினால், அவருக்கு தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் அவர் மூலமாக பல்வேறு திட்டங்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. என்று தெரிவித்துள்ளார்.