அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை அடுத்து, அந்த அணி 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மிகவும் சிக்கலானதாக மாற்றிக்கொண்டிருக்கிறது. தற்போது அந்த அணி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எடுத்த முடிவை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. எனினும், அடுத்த ஆண்டு தற்போது உள்ள அணியில் பெரிய மாற்றம் இருக்காது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணிதான் தொடரும் என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது பேச்சு விவாதமாக மாறியிருக்கிறது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்குப் பிறகு பேசிய பேட் கம்மின்ஸ், "சில விஷயங்கள் எங்களுக்கு எதிராகச் சென்றன. பவர் பிளேயில் எங்களின் பேட்டிங் நன்றாக இல்லை. நானும் சரியாகப் பந்துவீசவில்லை. மற்றவர்களைப் போலவே நானும் தவறு செய்திருக்கிறேன். இங்கே இருநூறு ரன்களைச் சேசிங் செய்வது சாத்தியம் என்பது போலத்தான் இருந்தது."
"குஜராத் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் எதையும் புதிதாக முயற்சி செய்யவில்லை. நாங்கள் சரியாகப் பந்துவீசவில்லை. அவர்கள் அதை பயன்படுத்திப் பவுண்டரிகள் அடித்தார்கள். நாங்கள் நிறைய மோசமான பந்துகளை வீசிவிட்டோம். இது நல்ல விக்கெட். எங்கள் அணி கடைசி 14 ஓவர்களில் 140 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அது ஒன்றும் மோசம் இல்லை. எங்கள் அணியில் அபிஷேக் சர்மா நன்றாக பேட்டிங் செய்தார். கடைசி நேரத்தில் நிதிஷ் ரெட்டியும் நன்றாக ஆடினார். ஆனால் கடைசியாக வந்த பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன் குவிக்க வேண்டிய அழுத்தம் இருந்தது".
"நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். கடந்த ஆண்டு நாங்கள் ஒரு பெரிய ஏலத்தை எதிர்கொண்டோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் தொடர்வார்கள். எனவே நாங்கள் இன்னும் நிறைய ஆட வேண்டி இருக்கிறது" என்றார் பேட் கம்மின்ஸ்.
இதன் மூலம், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சரியாக விளையாடாத போதும், அடுத்த ஆண்டு அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என கம்மின்ஸ் இப்போதே உறுதியாகக் கூறியிருக்கிறார். இந்த முடிவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முன்பே எடுத்து விட்டதாகவே தெரிகிறது. அதைத்தான் கம்மின்ஸ் உறுதியாகப் பேசியிருக்கிறார்.