கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 15வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
கொல்கத்தா ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தாலும், இந்த ஆடுகளும் தாங்கள் கேட்டது போல் இல்லை என கே கே ஆர் அணி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் எவ்வாறு செயல்பட போகிறது என்பதுதான் அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கம்மின்ஸ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்கை நம்பி அதிக ரன்கள் குவித்து பின்னர் அதனை தற்காத்துக் கொள்வதையே யுக்தியாக கம்மின்ஸ் வைத்திருந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் தற்போது திட்டத்தை மாற்றி முதலில் பந்து வீசுவதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. நான் ஆடுகளத்தை கணிப்பதில் நிறைய தவறுகள் செய்திருக்கின்றேன். ஒவ்வொரு போட்டியும் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து வீரர்களிடம் பேசி இருக்கின்றோம். நாங்கள் அதிரடியாக ஆக்ரோஷமாக விளையாடும் போது தான் சிறப்பாக விளையாடுகின்றோம் என்று தோன்றுகிறது.
இது ஒரு நீண்ட தொடராகும். எனவே எதைப் பற்றியும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. களத்திற்கு சென்று தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும். களத்தில் இன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் யார் என்பதை அவர்களை புரிந்துகொண்டு விளையாட வேண்டும் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பேசிய ரகானே ஆடுகளம் குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். நாங்களும் முதலில் பந்து தான் வீசிருப்போம்.
இன்றாவது சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆடுகளத்தை விரைவாக கணித்து அதற்கு ஏற்றார் போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்தில் பயமின்றி விளையாட வேண்டும். வெற்றி பெற நாங்கள் முயற்சி செய்வோம். எங்களது அணியில் இன்று மோயின் அலி பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கிறார் என்று ரகானே கூறியுள்ளார்.