ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்களை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக 300 ரன்கள் எடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்கு ஷர்துல் தாக்கூரின் அட்டகாசமான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு பின் அதிரடி திட்டம் ஒன்றும் உள்ளது.

ஷர்துல் தாக்கூர் தான் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து கடைசி நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து மொத்தம் நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
பின்னர் இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் திட்டம் குறித்து ஷர்துல் தாக்கூர் பேசினார். தன்னை 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் யாரும் எடுக்காதது குறித்தும், ஏன் லக்னோ அணியில் இணைந்தார் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.
"இது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். ஏலத்தில் எனக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்தது. எந்த அணியும் என்னை வாங்கவில்லை. ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் காயத்தில் சிக்கியதை அடுத்து அவர்கள் என்னை அணுகினார்கள். இந்த அணியில் ஜாகீர் கான் இருந்ததால் நான் இதை உடனே ஒப்புக் கொண்டேன்."
"ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு முக்கியமாக இருந்தது. நான் விக்கெட்களையோ, ரன்களை விட்டுக் கொடுப்பது பற்றியோ யோசிக்கவில்லை. இந்தப் போட்டியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்."
"சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடினமான தாக்குதல் பாணியை கடைபிடிக்கிறார்கள். அப்படி என்றால் பந்துவீச்சாளர்களும் அவர்கள் மீது கடினமான தாக்குதல் பாணியை கடைபிடித்தால் என்ன? அதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தட்டையான பிட்சுகளில் அதிக ரன்களை சேர்க்கிறார்கள். ஆனாலும் துவக்கத்தில் விக்கெட்டுகள் எங்களுக்கு கிடைத்தன" என்றார் ஷர்துல் தாக்கூர்.
செய்தி சுருக்கம்: