ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தினர். ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் முதல் இன்னிங்க்ஸில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. இதனை அடுத்து தொடக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அபிஷேக்சர்மா ஐந்து பௌண்டரிகளில் 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், இசான் கிஷன் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
இதை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் தடுமாறினர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஒரு ஓவரில் 23 ரன்கள் சென்றது. இதில் நான்கு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் சென்றன. 21 பந்துகளில் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுவாகும். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த டிராவிஸ் ஹெட்,31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இதில் ஒன்பது பௌண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்த சன்ரைசர்ஸ் அணி முதல் 10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி பவுலர்கள் செய்வது தெரியாமல் முழித்து வருகின்றனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் கடந்த சீசன் போல் இந்த சீசனும் அதிரடி காட்டி வருவது அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறனை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.