மும்பை: 2025 ஐபிஎல் தொடர் துவங்கும் தேதியை ஐபிஎல் தலைவர் அருண் துமால் உறுதி செய்து இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று ஐபிஎல் தொடர் துவங்கும் என அவர் உறுதியாக கூறி இருக்கிறார். மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விதிகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் கூறி இருக்கிறார்.
அருண் துமால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில் பங்கேற்ற போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக மார்ச் 14 அன்று ஐபிஎல் தொடர் துவங்கும் என சில செய்திகள் வெளியாகி இருந்தன. அது தவறு என தற்போது தெரிய வந்துள்ளது.

அருண் துமால் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பை வைத்து பார்க்கும் போது மார்ச் 21 முதல் மே 25 வரை ஐபிஎல் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், சென்ற ஆண்டு இருந்த அதே எண்ணிக்கையிலான போட்டிகள் தான் இந்த ஆண்டும் நடைபெறும்.
சென்ற ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்கி ஐபிஎல் மே 26 அன்று முடிவுக்கு வந்தது. அதேபோல இந்த முறை மார்ச் 21 துவங்கி மே 25 அன்று முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது.
அந்த தொடர் மார்ச் 9 அன்று முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பி சற்று ஓய்வு எடுத்த பின்னர் தங்களின் ஐபிஎல் அணிகளுடன் இணைந்து பயிற்சி செய்யும் வகையில் போதிய கால அவகாசமும் கிடைக்கும்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த அந்த மெகா ஏலத்தில் 182 வீரர்கள் சுமார் 639.15 கோடிக்கு ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாயையும், ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடியையும் சம்பளமாக பெற்றனர்.