மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லை மோதல் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்பட்ட பின்னர், மே 17 அன்று மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கும் முதல் போட்டி, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகளுக்கு இடையே நடைபெறும்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நாடு சமீபத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் எல்லை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, போட்டிகளின் போது உரத்த இசை மற்றும் உற்சாக நடனக் குழுவினரைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

"நான் உண்மையாக விரும்புவது என்னவென்றால், இதுவரை சுமார் 60 போட்டிகள் நடந்துள்ளன, இன்னும் 15 அல்லது 16 போட்டிகள் மீதமுள்ளன. நடந்த சம்பவங்கள் மற்றும் சில குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருப்பதால், இசை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஓவர்களுக்கு இடையில் டிஜேக்கள் கத்துவதைத் தவிர்க்க வேண்டும்," என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
"DJ இசை என எதுவும் வேண்டாம். போட்டிகள் நடைபெறட்டும், கூட்டம் வரட்டும். மீதமுள்ள போட்டிகளை எளிமையாக நடத்துவோம். நடனப் பெண்கள் இல்லாமல், எதுவும் இல்லாமல், கிரிக்கெட் மட்டுமே இருக்கட்டும். இது, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கும்," என்று கூறினார்.
இதே போன்று ஐபிஎல் போட்டியை நிறுத்திய முடிவை கவாஸ்கர் ஆதரித்தார். நாடு எதிர்கொண்ட மோதல்களின் காரணமாக விளையாட்டுக்கு இடமில்லை என்று கூறினார்."போட்டி திடீரென நிறுத்தப்பட்டது, அது முற்றிலும் சரியான முடிவு. அந்த நேரத்தில், மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால், விளையாட்டுக்கு இடமில்லை. என்று கவாஸ்கர் கூறினார்.
கவாஸ்கரின் இந்த கருத்து சரியான ஒன்று பலரும் வலியுறுத்தி உள்ளனர். எனினும் இதனை பஹல்காம் தாக்குநடந்த போதே செய்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் கவாஸ்கரின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.