மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கும் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளுக்கும் இடையேயான பெரிய வேறுபாடு குறித்து தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக வீரர்கள் பெறும் அங்கீகாரம் மற்றும் சம்பளத்தில் இந்த வேறுபாடு அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'ஸ்போர்ட்ஸ்டார்' பத்திரிகையில் எழுதியிருக்கும் கட்டுரையில், ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி கவாஸ்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர்களை உருவாக்கியதில் ஐபிஎல் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் பாராட்டியுள்ளார். பல அறியப்படாத வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை ஐபிஎல் தொடருக்கு உண்டு என்பதையும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் வீரர்களின் ஆட்டங்கள் எப்படி பார்க்கப்படுகின்றன, அதற்கு எப்படி வெகுமதி அளிக்கப்படுகிறது என்பதில் உள்ள பெரிய வேறுபாட்டை கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். "ஐபிஎல் தொடரில் ஒரு சிறப்பான ஆட்டம் போதும், அது ஒரு அறியப்படாத வீரரைக் கூட பெரிய அங்கீகாரத்திற்கும், உயரிய வாய்ப்புகளுக்கும் கொண்டு செல்லும். இது ரஞ்சி கோப்பைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. அங்கு சிறப்பாக விளையாடும் வீரர்களின் ஆட்டம்கூட தலைப்புச் செய்திகளில் இடம் பெற சிரமப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதை கவாஸ்கர் மேற்கோள் காட்டி, "இந்தியாவின் பாரம்பரியமான உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி ரீதியிலான சமநிலையற்ற தன்மையையும் அவர் எடுத்துரைத்தார். ரஞ்சி, விஜய் ஹசாரே அல்லது சையத் முஷ்டாக் அலி தொடர்கள் என சீசன் முழுவதும் விளையாடும் வீரர்களுக்குக் கூட, ஐபிஎல்-லில் அறிமுகமாகாத ஒரு வீரரின் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு நிகரான ஒப்பந்தங்கள் கூட கிடைப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
"ஐபிஎல்-லில் ஒரு சிறப்பான சீசன் ஒரு வீரருக்கு, அவர் ரஞ்சி கோப்பையில் வாழ்நாள் முழுவதும் விளையாடி சம்பாதிப்பதை விட அதிக பணப் பலனைத் தரும் பல உதாரணங்கள் உள்ளன," என்று கவாஸ்கர் கூறினார். உள்ளூர் போட்டிகளில் கடுமையாக உழைக்கும் வீரர்களுக்கு இந்த நிலைமை "கசப்பானது" என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு ஒரு தீர்வாக, மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்ளூர் வீரர்களுக்கு தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று கவாஸ்கர் பரிந்துரைத்தார். "பிசிசிஐ ரஞ்சி வீரர்களுக்கு அளிக்கும் ஊதியத்திற்கு இணையாக மும்பை போன்ற பிற மாநில கிரிக்கெட் சங்கங்களும் வழங்கினால், இந்த சமநிலையற்ற தன்மையை ஓரளவிற்கு குறைக்க முடியும்," என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நன்மைகளை கவாஸ்கர் உறுதிப்படுத்தினாலும், அவரது கருத்துக்கள் ஒரு முக்கிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்தியாவின் முதன்மையான உள்ளூர் போட்டிகளுக்கும் உரிய மதிப்பையும், முக்கியத்துவத்தையும் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து வடிவங்களிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு போதுமான வெகுமதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.