மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் தயாராகி வந்தாலும், அடுத்த சில நாட்களில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்குகிறது. இதனால் எந்த அணி எந்த வீரர்கள் எடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லி அணி ரிஷப் பந்தை விடுவித்திருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை பெரும் பணம் கொடுத்து வாங்க டெல்லி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சிலர் ரிஷப் பண்டையே மீண்டும் டெல்லி அணி பெரும் காசு கொடுத்து ஆர் டி எம் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், டெல்லி அணி இசான் கிஷனை ஏலத்தில் எடுக்க மிகவும் தீவிரமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் டெல்லி அணி இசான் கிஷனை ஏலத்தில் எடுப்பதற்காக 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.
டி 20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்யும்போது அவர் போட்டியை தனியாளாக மாற்றக்கூடிய திறமையை உடையவர். டெல்லி அணி ரிஷப் பண்டை மீண்டும் ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளாது. இதனால் அவர்களுக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படும். இதே போல் பஞ்சாப் அணியிடம் நிறைய பணம் இருக்கின்றது. இதனால் அவர்களும் இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
கடந்த சீசனில் இசான் கிஷன் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 320 ரன்கள் எடுத்தார். மும்பை அணியிடம் ஒரு ஆர்டிஎம் கார்டு இருப்பதால், இசான் கிஷனுக்காக அதனை மும்பை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. டெல்லி அணி ஏலத்திற்கு முன்பே அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மற்றும் அபிஷேக் போரேல் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.