கவுஹாத்தி: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய வீரரான சுனில் நரைன் இடம் பெறவில்லை. அவர் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி 44 ரன்களை சேர்த்து, சிறப்பாக பந்து வீசி குறைந்த ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தார்.
அந்தப் போட்டியில் சுனில் நரைன் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களிலும் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

டாஸ் நிகழ்வின் போது சுனில் நரைன் விளையாடவில்லை என்று கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார். என்ன நடந்தது? என இது குறித்து விசாரித்தபோது சுனில் நரைனுக்கு உடல்நலம் சரியில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக 37 வயதான மற்றொரு ஆல் ரவுண்டரான மொயீன் அலி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்திருந்தார். அதனால் அவர் இந்த முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் விளையாடாததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
மேலும் 2021 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் சுனில் நரைன் விளையாடவில்லை. அதற்குப் பிறகு இப்போது தான் அவர் ஒரு ஐபிஎல் போட்டியில் இடம் பெறவில்லை. இடையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இடம் பெற்றிருந்தார்.
இதுவே அவர் அந்த அணிக்கு எத்தனை முக்கியமான வீரர் என்பதை உணர்த்தும் விஷயமாக உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு தான் விளையாடிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி வரும் போட்டிகளில் வெற்றிகளை பெற்று தன்னம்பிக்கையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அந்த அணி.
செய்தி சுருக்கம்: