ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியிலே 280 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியது. இதனால் கடந்த சீசன் போல் சன்ரைசர்ஸ் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்தும் தலைக்கீழ் மாறிவிட்டது.
தற்போது புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசஸ் அணியின் கேப்டன் வீரர்கள் சூழலை புரிந்து கொண்டு விளையாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன் பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கௌரவமான இலக்கை எட்ட உதவினார்கள். இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரி விலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம். ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். நாங்கள் ஆடுகளம் குறித்து ஒவ்வொரு போட்டியிலும் பேசுகின்றோம். நீங்கள் நல்ல விதமாக பந்து வீச அனுமதி உண்டு.
ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கவும் அனுமதி உண்டு. இல்லை விக்கெட்டுகளை இழந்த பிறகும் மீண்டும் சிறப்பாக விளையாடி போட்டிக்குள் வர யாரும் தடுக்கவில்லை. எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி ஸ்கோர் ஜீரோக்கு ஜீரோ என்ற நிலையில் தான் ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் போது ஒவ்வொரு முறையும். ஆடுகளத்தை நாம் சோதித்து அதன் பிறகு விளையாட வேண்டும்.
முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன் பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும். எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது.
அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன் பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும். சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.