ஐதராபாத்: ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் என அனைவராலும் கணிக்கப்பட்ட ஒரு அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து தகுதி பெரும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்று ரன்னர் அப் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி இம்முறை கோப்பையை வெல்லும் என காவ்யா மாறன் உட்பட பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கு தகுந்தார் போல் சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியிலே 280 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி சரவெடியை கொளுத்தியது. எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற பெயரில் சன்ரைசர்ஸ் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக அடுத்தடுத்து போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் எஞ்சி இருக்கும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் அணி இருந்தது. இந்த சூழலில் தான் 55வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை சன்ரைசர்ஸ் அணி தங்களது சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சன்ரைசர்ஸ் அண்டு கடும் ஆக்ரோஷமாக பந்து வீசினார்கள்.
இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் டெல்லி அணி 29 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் நடுவரிசையில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று இறுதியில் ஆஸ்டோஸ் சர்மா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை சன்ரைசர்ஸ் அணி விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று ஹைதராபாத்தில் மழை கொட்டியது.
மழை கொஞ்சம் கூட நிற்காததால் வேறு வழியின்றி நடுவர்கள் ஐந்து ஓவர் போட்டிக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மழையின் காரணமாக ஆடுகளம் சேதமடைந்தது. இதனால் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகள் பெற்று தற்போது எட்டாவது இடத்தில் இருக்கின்றனர். டெல்லிய அணி 13 புள்ளிகளுடன் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியால் இனி அதிகபட்சமாக 13 புள்ளிகளே பெற முடியும் என்பதால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை அந்த அணி இழந்தது. ஒருவேளை ஆட்டம் 5 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு இருந்தால் சன்ரைசஸ்க்கு 42 ரன்கள் தான் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் மழை காரணமாக சன்ரைசர்ஸின் கனவு பறிபோகி இருக்கிறது.