பெங்களூர்: விராட் கோலி தனது தற்போதைய திறமைக்கு 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கலாம், ஆனால் அவர் முன்பாகவே சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார். அந்த இறுதிப் போட்டியில் அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 76 ரன்களை எடுத்தார். அந்த இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.

அத்துடன் கோலி இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே டி20 போட்டிகளில் விளையாடி வரும் அவர், அதில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 392 ரன்களை அடித்துள்ளார். அவரது சராசரி 65.33 என்பதாக உள்ளது.
இந்த நிலையில்தான் சுரேஷ் ரெய்னா விராட் கோலியின் ஆட்டம் பற்றியும், அவரது உடல் தகுதி பற்றியும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். விராட் கோலி இரண்டு விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதை சுட்டிக்காட்டி, அவர் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம் எனக் கூறியுள்ளார்.
இது பற்றி சுரேஷ் ரெய்னா பேசியதாவது: "விராட் கோலி முன்பாகவே தனது ஓய்வை அறிவித்துவிட்டார். அவர் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எப்படி விளையாடினார் என்று நாம் பார்த்தோம். அவரது ஐபிஎல் செயல்பாடு மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் ஆடும் திறன் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.