அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தொடர்ந்து தழுவியதற்கு பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. பந்துவீச்சில் கூட சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக செயல்பட பேட்டிங் மோசமாக இருந்தது.
குறிப்பாக பவர் பிளேவில் குறைவான ரன்களை எடுத்தது. மற்ற அணிகள் எல்லாம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்ல சிஎஸ்கே அணி மட்டும் ரன்களில் குவிப்பதில் டவுன் பஸ் வேகத்தில் தான் சென்றது. மேலும் அதிரடியாக ஏன் வீரர்கள் ஆடுவதில்லை என்ற கேள்வி கேட்கும் போதெல்லாம் இது கிரிக்கெட், பேஸ் பால் ஒன்றும் கிடையாது.

கிரிக்கெட்டை இப்படி தான் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மாறிவரும் காலத்திற்கு ஸ்டீபன் பிளமிங் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றும், இதன் காரணமாக பிளமிங் அணியை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இளம் வீரர்கள் அதிக அளவு சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த பிறகு ரன்கள் அடிக்கும் வேகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. சிஎஸ்கே அணி பேட்டிங்கில் தனது கடைசி ஆட்டத்தில் 8.5 ஓவர்கள் எல்லாம் 100 ரன்களையும், 13 ஒவர் முடிவில் எல்லாம் 150 ரன்களையும் சிஎஸ்கே அணி கடந்திருந்தது. அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சுரேஷ் ரெய்னா, நான்கு நாட்கள் கழுகு பறக்க வில்லை என்றால் வானம் முழுவதும் புறாக்களுக்கு சொந்தம் ஆகாது என்பதை சிஎஸ்கே நிரூபித்து விட்டதாக கூறினார்.
மேலும் அடுத்த சீசனில் புதிய பேட்டிங் பயிற்சியாளர் சிஎஸ்கேவுக்கு வரப் போகிறார் என்று ரெய்னா குறிப்பிட்டார். அப்போது பேசிய ஆகாஷ் சோப்ரா, அந்த பேட்டிங் பயிற்சியாளரின் முதல் எழுத்து எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்குமா என்று கேட்டார். இதற்கு சுரேஷ் ரெய்னா, கலகலவென சிரித்தார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ரெய்னா வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றன. ரெய்னா வந்தால் சிஎஸ்கே அணியில் பேட்டிங் முற்றிலும் மாறுபடும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பலரும் சின்ன தல மீண்டும் வரவேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.