சிஎஸ்கே அணிக்கு இருக்கும் சிக்கல்.. தோனி இன்னும் 2025 ஐபிஎல் ஆடணும்.. சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டும் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னா பேசி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் சிக்கல் காரணமாக அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.
தோனிக்கு தற்போது 43 வயது ஆகிறது. அவர் 2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்து ரன் குவித்தாலும், அதிக நேரம் அவரால் களத்தில் நிற்க முடியவில்லை. அதனால், கடைசி ஒன்று, இரண்டு ஓவர்களின் போது மட்டுமே அவர் பேட்டிங் செய்தார். 14 போட்டிகளில் 161 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220 ஆக இருந்தது. அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்திருந்தார்.

தோனி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய போதும் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது பின்னடைவாகவே உள்ளது. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அப்படியே தோனி அடுத்த ஆண்டு விளையாடினாலும் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என கூறப்படுகிறது. இம்பாக்ட் வீரராக களமிறங்கி சில ஓவர்கள் பேட்டிங் மட்டுமே செய்யக் கூடிய நிலையில் தான் தோனி இருக்கிறார்.
இதனிடையே ஒரு ஐபிஎல் அணி எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ விதிமுறைகளை வெளியிட்டால் மட்டுமே சிஎஸ்கே அணி தோனியை தக்க வைக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுக்கும். 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஐந்து வீரர்களை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே தோனி சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சுரேஷ் ரெய்னா முக்கியமான ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்-டின் செயல்பாடு நன்றாக இருந்தாலும், அவர் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்றும், அதன் காரணமாக தோனி இன்னொரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததால் விமர்சனத்தை சந்தித்ததை கூறி இருக்கிறார் ரெய்னா.
இது குறித்து அவர் பேசுகையில், "2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு அவர் எப்படி பேட்டிங் செய்தார் என்பதை பார்த்ததால் இதை நான் சொல்கிறேன். கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பின் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டது என்பதை வைத்தும், ருதுராஜ் கெய்க்வாட் எப்படி கேப்டன்சி செய்தார் என்பதை வைத்தும், அவருக்கு இன்னும் ஓராண்டு உதவி தேவை என்று நான் நினைக்கிறேன். அதற்காக தோனி ஆட வேண்டும். அதே சமயம், ருதுராஜ் தனது பணியை சிறப்பாகவே செய்துள்ளார்." என்றார் சுரேஷ் ரெய்னா.


Click it and Unblock the Notifications