மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டாவது வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆப் சுற்றுக்கு 11-வது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பிறகு கடைசி இரண்டு ஓவரில் சூரியகுமார் மற்றும் நமன் தீர் ஆகியோர் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டி இரண்டு ஓவர்களில் 48 ரன்களை விளாசினர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது.

இதில் சூரியகுமார் யாதவ் 43 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சூரியகுமார் யாதவ்க்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இன்று அபாரமாக விளையாடியது ஏன் என்பது குறித்து அவர் ஒரு ரகசியத்தை கூறினார். அதில், இந்த தொடரில் 13 போட்டிகள் முடிவடைந்து விட்டது. ஆனால் நேற்றுதான் என்னுடைய மனைவி ஒரு விஷயத்தை சொன்னார்.
நான் அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டேன்.ஆனால் ஆட்டநாயகன் விருது மட்டும் வாங்கவில்லை என்று கூறி இருந்தார். இதனால் இந்த விருது எனக்கு மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கின்றது. இதனால் இந்த விருதை என்னுடைய மனைவிக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அணியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது.
அனுபவ வீரராக களத்தில் இருந்து கடைசி வரை விளையாட வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கின்றது. இந்த விருது நான் வாங்கியது என்னுடைய மனைவிக்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் நாங்கள் இருவரும் இணைந்து பெரிசாக கொண்டாடுவோம்.
எனவே இன்று என் மனைவியின் கொண்டாட்டத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன். இது போன்ற போட்டிகளில் ஏதேனும் ஒரு வீரர் கடைசி வரை நின்று ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். ஏதேனும் ஒரு ஓவர் பதினைந்து முதல் 20 ரன்கள் நம்மால் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நமன் தீர் களத்திற்கு வந்து என்னையும் ஊக்கப்படுத்தும் விதமாக விளையாடினார். தற்போது பிளே ஆப்க்கு தகுதி பெற்று விட்டோம் இனி வரும் நாட்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.