மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி வருகிறார். முதல் சில ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மா தடுமாறினார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 24 ரன்களும், லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஆறு ரன்கள் அடித்திருந்தார்.
டெல்லி அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஒரு ரன்னும், கொல்கத்தா அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் இரண்டு ரன்களும், குஜராத் அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் 18 ரன்களும் அபிஷேக்சர்மா அடித்திருந்தார்.

இதனால் அபிஷேக் ஷர்மா ஏன் பெரிய ஸ்கோர் அடிப்பதில்லை என்று ரசிகர்களும் ஏக்கத்தில் இருந்தனர். அந்த சூழலில் தான் பஞ்சாப் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா, 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். இதில் 14 பௌண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 256 என்று அளவில் இருந்தது.
அபிஷேக் ஷர்மா 40 பந்துகளில் எல்லாம் சதம் அடித்து அசத்தினார். அப்போது அபிஷேக் சர்மா திடீரென்று தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ரசிகர்களுக்கு காட்டினார். அதில் இந்த சதம் உங்களுக்காக தான் என்று எழுதி இருந்தார். இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி ஏழு பவுண்டரிகள் விளாசி 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியிலும் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். முதலில் அபிஷேக் ஷர்மா திடீரென்று அதிரடியை காட்டிய போது அங்கிருந்து வந்த சூரிய குமார் திடீரென்று அபிஷேக் ஷர்மாவின் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஏதாவது பேப்பர் வைத்திருக்கிறாரா என்று பார்த்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு அபிஷேக் ஷர்மா சூரியகுமார் யாதவை கட்டி அணைத்து தன்னுடைய அன்பை பரிமாறிக் கொண்டார். இந்தியா அணியில் அபிஷேக்சர்மா தற்போது சிறந்து விளங்குவதற்கு சூரியகுமார் யாதவ் கொடுத்த வாய்ப்புதான் காரணம். இதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அபிஷேக் ஷர்மா அவரை கட்டி அணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.