மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான ஆயுஷ் மத்ரே குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவ், பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார். ஆயுஷ் மத்ரேவை 'இந்திய அணியின் எதிர்காலம்' என அவர் பாராட்டியிருக்கிறார். இதை அடுத்து அவருக்கு விரைவில் இந்திய டி20 அணியில் அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ஆயுஷ் மத்ரே அதிரடியாக ஆடினார். அவர் 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். 195.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். அவரது அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அவரை ஏற்கனவே அருகில் இருந்து பார்த்திருக்கும் சூர்யகுமார் யாதவ், ஆயுஷ் மத்ரேவை பாராட்டித் தள்ளியிருக்கிறார். ஆயுஷ் மத்ரே மும்பை அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவும் மும்பை அணிக்காக விளையாடுகிறார். தனது சக மாநில வீரரை சூர்யகுமார் யாதவ் பாராட்டி இருக்கிறார்.
ஆயுஷ் மத்ரேயின் ஆட்டம் குறித்து சூர்யகுமார் யாதவ் வெளியிட்டு இருக்கும் பதிவில், "ஆயுஷ் மத்ரேயின் இன்னிங்ஸ் அதிரடி ஆடும் நோக்கத்துடனும், தைரியத்துடனும், நெருப்பு போன்றும் இருந்தது. இவர்தான் இந்திய அணியின் எதிர்காலம். இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆயுஷ் மத்ரேக்கு விரைவில் இந்திய டி20 அணியில் வாய்ப்பு தேடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பும் சூர்யகுமார் யாதவ், ஆயுஷ் மத்ரே குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுஷ் மத்ரேவைத் தான் பின்பற்றி வருவதாகவும், அந்த இளம் வீரர் கடுமையாக உழைத்து வருவதைத் தான் பார்த்திருப்பதாகவும், இந்த விளையாட்டுக்கு உண்மையாக இருப்பது தான் தனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
"'பயிற்சிக்கு முதல் நபராக வருவார், மைதானத்தை விட்டு கடைசி நபராக தான் செல்வார். ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் மிகவும் முக்கியமான விஷயம். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிப்பார். அவருக்கு நான் ஒரே ஒரு செய்தியை தான் சொல்லிக் கொள்கிறேன். இந்த விளையாட்டுக்கு உண்மையாக இருங்கள்'" என்று சூர்யகுமார் யாதவ் முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.