ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 55 ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பலப் பரீட்சை நடத்துகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கும் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணிக்கும் இடையிலான இந்த போட்டி டெல்லியை விட ஹைதராபாத்துக்கு தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும். இந்த சூழலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இது கருத்து தெரிவித்துள்ள கம்மின்ஸ், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். நாங்கள் இன்றைய ஆட்டம் குறித்து பல விவாதங்களை நடத்தினோம். இந்த தொடரில் எங்களுக்கு மிகச் சிறந்த ஒரு போட்டி அமையவில்லை. அடிப்படையை சரியாக செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கின்றோம்.
எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர் தான். நமக்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் அணியின் பேட்டிங் பலமாக இருக்கின்றது. எங்கள் அணியின் நிர்வாகிகளும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும் எங்கள் அணியின் ரசிகர்கள் பிரமாதமாக இருக்கின்றார்கள்.
களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதை வைத்து தான் நம்மை நாமே பரிசீலனை செய்து கொள்ள முடியும் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், நாங்கள் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை தான் தேர்வு செய்திருப்போம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது.
இரண்டாவது இன்னிங்சிலும் ஆடுகளத்தின் தன்மை மாறாது என்று நினைக்கின்றேன். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயித்து சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும் இதைப் பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவில்லை.
இந்த சீசன் தொடக்கத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இது போன்ற போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தான் நம்மை நாம் பரிசோதனை செய்து கொள்ள முடியும். மேலும் தற்போது இருக்கும் நெருக்கடி நம்மை சூழ்ந்து கொள்ள அனுமதிக்க கூடாது. எங்கள் அணியில் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு வீரர்கள் வந்து சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
நாங்கள் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் நம்பி இல்லை. இது போன்ற தொடரில் உத்வேகம் என்பது மிகவும் முக்கியம் நாங்கள் தோல்வியை தழுவினாலும் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கக்கூடாது என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று நடராஜனுக்கு முதல்முறையாக வாய்ப்பு டெல்லி அணியில் வழங்கப்பட்டு இருக்கிறது.