டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டிருந்த தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சரியாக ஏழு பந்துகளை மட்டுமே வீசினார். அத்துடன் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. அவருக்கு மீண்டும் ஐபிஎல் தொடங்கும் போது சரியான வாய்ப்புகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது நடராஜன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். யார்க்கர் பந்துகளை வீசுவதில் நடராஜன் திறமை வாய்ந்தவர் என்பதால், ஐபிஎல் அணிகளுக்கு மத்தியில் அவருக்கென ஒரு மரியாதை உள்ளது. அவரை வாங்குவதற்கு ஏலத்தில் பல அணிகளும் போட்டி போட்டன.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடராஜனை 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் அவருக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 10 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. பின்னர் நடராஜனை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்களால் முன்வைக்கப்பட்டது.
டெல்லி அணியில் முகேஷ் குமார் படுமோசமாக பந்து வீசி வந்த நிலையில் அவருக்கு பதிலாக நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனம் அதிகரித்தது. இதை அடுத்து, 11வது போட்டியில் தான் நடராஜனுக்கு வாய்ப்பளித்தது டெல்லி கேப்பிடல்ஸ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடராஜன் பங்கேற்ற அந்தப் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் செய்ததுடன் அந்தப் போட்டி கைவிடப்பட்டது. நடராஜனுக்கு அந்தப் போட்டியில் பந்துவீசும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் நடராஜனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ரன் சேர்த்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இந்த நிலையில் நடராஜன் மட்டுமே டெல்லி அணியில் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் தான் வீசிய முதல் ஓவரில் (டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் 6வது ஓவர்) வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்து தான் வீசிய ஆட்டத்தின் 11வது ஓவரின் முதல் பந்திலேயே பிரியன்ஷ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்தினார்.
சரியாக அத்துடன் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின் 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நடராஜன் பந்துவீச துவங்கிய நிலையில் ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த அளவுக்கு துரதிஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார் நடராஜன். ஆனால், தான் வீசிய 7 பந்துகளில் 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி தனது முத்திரையை பதித்து இருக்கிறார் என்பது தான் இதில் பாராட்டத்தக்க அம்சம்.
இனி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது, நடராஜனுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா, மீண்டும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.