மும்பை: விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இளம் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டேன் என்று கூறிய அவர், விரைவில் ரசிகர்களின் நம்பிக்கையை பெறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஹசாரே தொடர் நடக்கவுள்ளது. வரும் 21ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை விஜய் ஹசாரே தொடர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநில அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 3 போட்டிகளுக்கான மும்பை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், ரகுவன்ஷி, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அனுபவ வீரரான அஜிங்கியா ரஹானே தேர்வு செய்யப்படவில்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் நட்சத்திர வீரரான பிரித்வி ஷாவின் பெயரும் இடம்பெறவில்லை. ஏற்கனவே ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஷா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அண்மையில் முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் பிரித்வி ஷா ஒரு அரைசதம் கூட அடிக்காமல், 9 இன்னிங்ஸ்களில் 196 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தது.
இந்த நிலையில் விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். இதனால் பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை கடவுளே.. 65 இன்னிங்ஸ்களில் 3,399 ரன்களை விளாசி இருக்கிறேன்.. 55.7 பேட்டிங் சராசரியுடன், 126 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை சேர்த்திருக்கிறேன்.
இருந்தாலும் இது போதுமானதாக இல்லை. ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை இழக்க போவதில்லை.. மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். நிச்சயம் கம்பேக் கொடுப்பேன்.. ஓம் சாய் ராம் என்று தெரிவித்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் வென்ற பின் மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷாவின் ஃபிட்னஸ் மற்றும் ஒழுங்கீன சிக்கல் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.