மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் மூன்று பந்துகள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ இந்த புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 11வது ஓவர் முதல் அந்தப் போட்டியின் மூன்றாவது பந்தை பயன்படுத்த முடியும்.
இதன் மூலம், இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், புதிய பந்தை மாற்றுவது குறித்த இறுதி முடிவை அம்பயர் தான் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இந்த விதி தற்போது புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணி முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறுவதால், இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசும் அணிக்கு காற்றில் இருக்கும் ஈரப்பதத்தால் பெரும் பிரச்சனை ஏற்படும். அந்த ஈரப்பதம் காரணமாக மைதானத்தில் இருக்கும் புற்கள் ஈரமாக இருக்கும். அதில் உருண்டு ஓடும் பந்து நீரில் நனைந்து விடும்.
அப்போது பந்து வீசுவது மிகவும் சிரமமாக இருக்கும். அதிகமான ஈரப்பதம் இருந்தால் நேரம் செல்ல செல்ல பந்து மிகவும் கனமானதாக மாறிவிடும். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கோ அல்லது ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கோ பந்து வீசுவது மிகவும் சிரமமாகிவிடும்.
அந்த பிரச்சனையை போக்குவதற்காகவே இந்த மூன்றாவது பந்து விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இனி ஐபிஎல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 11-வது ஓவருக்கு பிறகு இந்த புதிய பந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது ஈரப்பதம் காரணமாக பந்து பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே அமலுக்கு வரும். இது குறித்து இறுதி முடிவை அம்பயர் தான் எடுப்பார். பந்து வீசும் அணியின் கேப்டன் புதிய பந்துக்காக கேட்கலாம். ஆனால், முடிவு அம்பயர் உடையது தான்.
மேலும், இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது பந்து விதி மாலை நேரத்தில் நடக்கும் போட்டிகளுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், அப்போது காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்காது. அதனால் பந்து பாதிப்படைந்து இருக்காது.
இந்த புதிய விதியின் மூலம் இரண்டாவதாக பந்து வீசும் அணி சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. கடந்த காலங்களில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே விரும்பும். ஏனெனில், இரண்டாவதாக பந்து வீசும் போது காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக பந்து பாதிப்படையும் என்பதால் இந்த முடிவை எடுப்பார்கள். இந்த டாஸ் சாதகத்தை போக்குவதற்காக பிசிசிஐ இந்த புதிய விதியை அமல்படுத்தி உள்ளது.
இதன் மூலம், இரண்டாவதாக பந்து வீசும் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முடியும். இனி காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஒரு வியூகமாக எந்த அணியும் வகுத்து செயல்பட முடியாது. இது போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கும். மேலும், டாஸ் வென்றாலும், வெல்லாவிட்டாலும் இரு அணிகளுக்கும் சமநிலையை உருவாக்கும். எனவே, பிசிசிஐ இந்த விதியை அமல்படுத்தி உள்ளது.
மேலும், எச்சிலை பந்தின் மீது பயன்படுத்துவதற்கான தடையையும் பிசிசிஐ நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. முகமது ஷமி சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இடையே இது குறித்து பேசியிருந்தார். பந்தின் மீது எச்சிலை பயன்படுத்துவதன் மூலம் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பதால், அதை உடனடியாக நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போது அந்த விதியையும் ஐபிஎல் தொடரில் நீக்கி உள்ளது பிசிசிஐ.