மும்பை: 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் இடையே போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் கேட்டதாகவும், பெரும்பாலான வீரர்கள் தற்போது போட்டிகளில் விளையாடுவது குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஐபிஎல் தொடரைத் தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியை சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் நடைபெற வேண்டும். மீதமுள்ள 16 போட்டிகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடைசியாக நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.1 ஓவர் வீசப்பட்ட நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்கள், அம்பயர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து போர் பதற்றத்துக்கு இடையே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ கூட்டம் நடத்தியதாக கூறப்பட்டது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
மேலும், நாடு போர் சூழலில் இருக்கும் போது ஐபிஎல் போன்ற கேளிக்கை தேவையா? என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை தற்கலிகமாக நிறுத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ரயில் மூலம் டெல்லிக்கு சென்றுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோவில் உள்ளது. இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருந்தது. ஆனால், நேற்று நடந்த எல்லையோர தாக்குதல்களால் பெங்களூர் அணி வீரர்கள் உடனடியாக லக்னோவில் இருந்து கிளம்ப வேண்டும் என கூறி வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது பெங்களூர் அணி வீரர்கள் லக்னோவில் இருந்து கிளம்ப உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.