சென்னை : ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் களத்திற்கு வெளியே ஏலத்திலும் நல்ல வீரர்களை பல யுத்திகளை அமைத்து தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி வாங்கிய டாப் 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ருதுராஜ். வெறும் ₹20 லட்சம் ரூபாய்க்கு தான் ருதுராஜ் வாங்கப்பட்டார்.

ஆரம்ப கட்டத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ருதுராஜ், தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையையும் ருதுராஜ் சமன் செய்திருந்தார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ. பிராவோ 2011 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். பிராவோ முதல் முறையாக சிஎஸ்கே அணிக்கு வந்தபோது வெறும் 92 லட்சம் ரூபாய்க்கு தான் வாங்கப்பட்டார்.
அதன் பிறகு சிஎஸ்கே அணிக்காக விக்கெட் வேட்டை மற்றும் முக்கிய கட்டத்தில் ரன்ளை குவித்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக ஜடேஜா இருக்கிறார். ஒரு கட்டத்தில் தோனியை விட அதிக ஊதியம் பெரும் வீரராக ஜடேஜா இருக்கிறார். ஜடேஜாவை சிஎஸ்கே அணி 9 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
அன்று முதல் இன்று வரை ஜடேஜாவை சுற்றியே சிஎஸ்கே அணி இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னா இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஏலத்தில் ரெய்னாவை இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
இதனை தொடர்ந்து பத்து சீசனுக்கு மேல் 400 ரன்கள் தொடர்ந்து அடித்து ரெய்னா சாதனை படைத்தார். ரெய்னா தற்போது சிஎஸ்கே அணியில் இல்லை என்றாலும் சிஎஸ்கே வின் முக்கியத்துவமாக அவர் திகழ்ந்தார். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2008 ஏலத்தில் தோனியை 6 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது. அதன் பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்று ஐந்து கோப்பைகளை வாங்கி கொடுத்தார்.