சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வரப்போகிறார் என்று செய்தி அண்மையில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்த கேப்டன் ருதுராஜ் தான் என்பது சி எஸ் கே ஏற்கனவே முடிவு எடுத்த நிலையில் அவரும் முதல் சீசனில் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஏன் அவரை தேவையில்லாமல் சிஎஸ்கே மாற்றப் போகிறது என்று கேள்வி எழுந்தது. எனினும் பல செய்தி நிறுவனங்கள் இதனை வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் லாஜிக் படி இதற்கு சாத்தியமே இல்லை. எந்த ஒரு அணியும் ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரரை தக்க வைக்காமல் விடாது. அது மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் ஒரு கேப்டனாக டெல்லி அணியில் இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண வீரராக சிஎஸ்கே அணிக்கு வருவதை நிச்சயம் விரும்ப மாட்டார். அது மட்டும் இல்லாமல் ருதுராஜ் ஏற்கனவே கேப்டனாக வளர்த்தெடுக்கப்பட்ட நிலையில் அவரும் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். இதனால் ருதுராஜை மாற்றி ரிஷப் பண்டை கேப்டனுக்கு கொண்டு வருவது தற்கொலைக்கு சமமான ஒரு முடிவாகும்.
மேலும் நாம் விசாரித்த வகையில் ருதுராஜை மாற்றம் பேச்சுக்கே இடமில்லை என்று தான் சிஎஸ்கே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மெகா ஏலம் வரப்போவதால் தோனி எந்த திட்டத்தை வைத்திருக்கிறார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் சிஎஸ்கே வெளியேறி இருப்பது தோனிக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் தனது உடல் நிலையை பார்த்துக் கொண்டு தோனி அடுத்த சீசனும் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு மிகவும் முக்கிய காரணம் இளம் வீரர்கள் பின்னாடி செல்லாமல் அனுபவ வீரர்களை எடுத்துக் கொண்டதுதான். அந்த வகையில் மெகா ஏலத்திலும் எந்த அனுபவ வீரர்களை மற்ற அணிகள் தக்க வைக்காமல் வெளியேற்றுகிறார்களோ அவர்களை தேடித்தேடி பிடிக்கும் திட்டத்தில் தான் சிஎஸ்கே இருக்கிறதாம்.
குறிப்பாக மார்க்கஸ் ஸ்டோனிஸ் போன்ற வீரர்கள் எல்லாம் லக்னோ அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி தொடரில் டி எஸ் கே அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ஸ்டோனிஸ் மற்றும் மற்ற அனுபவ வீரர்களை அணியில் இருக்க தோனி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தங்கள் அணிக்கு விளையாடிய வீரர்களையே மெகா ஏலத்திலும் சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளும். அப்படி இல்லை என்றால் பிளான் பி, பிளான் சி படி வேறு அனுபவ வீரர்களை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.