கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வில்லன்கள் எதிரணியில் இருந்திருக்கிறார்கள். 90களில் இலங்கையைச் சேர்ந்த ஜெயசூர்யா, 2010 ஆம் ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் என பல வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடி நமது ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக தற்போது இந்தியாவின் புதிய வில்லனாக உருவெடுத்து இருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட். 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனி ஆளாக நின்று இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடி வீழ்த்தினார்.

இதே போன்று 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு டிராவிஸ் ஹெட் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இறுதிப் போட்டியில் மீண்டும் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசினார். இதைப் போன்று நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக இரண்டு சதம் விளாசினார்.
இதேபோன்று 2024 டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் 79 ரன்களை எடுத்தார். இப்படி பல முக்கிய இன்னிங்ஸ்களை இந்தியாவுக்கு எதிராக ஆடியதால் அவரைப் பார்த்தாலே இந்திய ரசிகர்கள் கதி கலங்கி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிராவிஸ் ஹெட், "எனக்கு ரசிகர்கள் எதைத் தருகிறார்களோ, அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்."
"இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் கிரிக்கெட் அதிக மக்களால் பின் தொடரப்படுகிறது. நான் இந்தியாவுக்கு எதிராக ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடிருக்கின்றேன். நான் இந்த அணிக்கு எதிராக சீரியஸாக விளையாட வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. இயல்பான ஆட்டத்தை எப்போதுமே வெளிப்படுத்துவேன்."
"என்னைப் பற்றி வரும் கருத்துகளை எல்லாம் பார்க்கும் போது நான் சிரிப்பேன். தற்போது எல்லாம் அதைப் பற்றி நான் கவலையே படுவதில்லை. நான் எப்போதுமே களத்திற்கு சென்று இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடுவேன். கடந்த 18 மாதங்களாக இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது நன்றாக செயல்பட்டு இருக்கின்றேன். அதேபோல் அவர்களும் எங்களுக்கு எதிராக நன்றாக விளையாடி இருக்கிறார்கள். எனவே ரசிகர்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள உறவை நான் உணர்கின்றேன்" என்று டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.