மும்பை: கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், 2025 ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் தன்னை புறக்கணித்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் அவர் ஐபிஎல் தொடரில் 148 போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என நான்கு ஐபிஎல் அணிகளில் அவர் இதுவரை விளையாடி இருக்கிறார். கடைசியாக 2024 ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 5.80 கோடிக்கு வாங்கப்பட்டு இருந்தார்.

2024 ஐபிஎல் தொடரில் உமேஷ் யாதவ் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். விக்கெட்கள் வீழ்த்தினாலும் அதிக ரன்கள் விட்டு கொடுத்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த ஒரு அணியும் வாங்கவில்லை.
அது பற்றி பேசிய உமேஷ் யாதவ், "நான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நான் 15 ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடி வருகிறேன். இந்த முறை எந்த அணியும் என்னை வாங்காதது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பற்றி நான் ஏன் பொய் சொல்ல வேண்டும். நான் மிக மோசமாக உணர்ந்தேன்." என்றார்.
மேலும், "கிட்டத்தட்ட 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால், இப்போது எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. இது அதிர்ச்சியாக உள்ளது. என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை ஐபிஎல் அணிகள் தான் சொல்ல வேண்டும். அவர்களின் வியூகம் அல்லது ஏலத்தில் எனது பெயர் மிகவும் பின்னால் அறிவிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம்." என்றார்.
"ஏலத்தில் என் பெயர் அறிவிக்கப்பட்ட போது அவர்களிடம் பணம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது. நான் மிகவும் வெறுப்படைந்தேன். எனினும், மற்றவர்களின் முடிவை நம்மால் மாற்ற முடியாது." என்றார் உமேஷ் யாதவ். அதன் பின்னர் உமேஷ் யாதவுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றி பேசுகையில், "ஐபிஎல் ஏலத்திற்கு பின் எனது காலில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. என்னால் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடியும் வரை நான் விளையாடுவேன். என்னால் பந்து வீச முடியவில்லை என்றால் நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவேன். இதை நான் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." என்றார்.